tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்றார்
2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி, மதவெறுப்புப் பிரச்சாரத்தை செய்வதாக துணிந்து கண்டித்தவர் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா. இவர் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராகவும் வரவிருந்தார். ஆனால், அவரை திடீரென ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank- ADB) துணைத்தலைவராக நியமித்த மோடி அரசு, புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமாரை நியமித்தது. இந்நிலையில் ராஜீவ் குமார் செவ்வாயன்று தேர்தல் ஆணையராக பதவி ஏற்றுக் கொண்டார்.

நாடாளுமன்றத் தொடரில் கேள்வி நேரம் கிடையாதாம்..
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், செப். 14 முதல் அக்.1 வரை நடைபெறும் என்று குடியரசுத் தலைவரால் திங்களன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனி, ஞாயிறு விடுமுறைகள்கூட இல்லாமல் தொடர்ந்து 17 நாட்களுக்கு இக்கூட்டம் நடைபெறும் என்பதுடன், கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் கொரோனா தாக்கம், வரலாறு காணாத பொருளாதார சரிவு உள்ளிட்ட பிரச்சனைகளை இக்கூட்டத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

முகநூல்-பாஜக தொடர்பு பற்றி நாடாளுமன்றம் விசாரணை
முகநூல், வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கும், பாஜக-வுக்குமான தொடர்புகள் குறித்து, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமங்கள் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படுவதுடன், கிரிமினல் விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

விமான நிலையங்கள் இந்தாண்டே தனியார்மயம்!
லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானிதான் விமான நிலையங்களை ஏலத்தில் எடுத்துள்ளார். இந்நிலையில், எவ்வளவு எதிர்ப்புகள் எழுந்தாலும் 2020-ஆம் ஆண்டிற்குள்ளேயே விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டு விடும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

ஏ.சி. ரயில் பெட்டிகளில் இனி போர்வை தரப்படாது
இந்திய ரயில்வேயின் கீழ் ஓடும் ரயில்களின் ஏ.சி. பெட்டிகளில் இனி போர்வைகள், மெத்தைகள், கைக்குட்டைகள் மற்றும் துண்டுகள் ஆகியவை தரப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, கொரோனா பரவலின் காரணமாக யாருக்கும் லினென் செட்கள் வழங்குவதில்லை. நிலைமை சரியான பிறகு, இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளளார்.

தொழிலதிபர் ஏ.சி. முத்தையா கடனாளியாக அறிவிப்பு
தமிழகத்தின் முக்கிய தொழிலதிபரான அண்ணாமலை சிதம்பரம் முத்தையா எனப்படும் ஏ.சி. முத்தையாவும், பரூக் இரானி என்பவரும் புரொமோட்டர்களாக இருக்கும் “பர்ஸ்ட் லீசிங் கம்பெனி ஆப் இந்தியா” ரூ. 508 கோடியே 40 லட்சம் கடன்பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏ.சி. முத்தையாவை, திறனிருந்தும் கடனைத் திருப்பிச் செலுத்தாத கடனாளிகள் பட்டியலில் சேர்த்து ஐடிபிஐ வங்கி அறிவித்துள்ளது. சிண்டிகேட் வங்கியில் ஏ.சி. முத்தையா ரூ. 102 கோடியே 87 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் கடந்த 2018 ஜூனில் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு ஜப்பான்  ரூ. 3,500 கோடி கடன்!
கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக, இந்திய சுகாதாரத் துறைக்கான அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியாக ஜப்பான் 50 பில்லியன் ‘யென்’ (சுமார் ரூ. 3 ஆயிரத்து 500 கோடி) கடன் வழங்கியுள்ளது. இதற்கான திட்டக் குறிப்புகளை இந்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் சி.எஸ். மோகபத்ராவும், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சுசுகி சடோஷியும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சிக்கிம், பூடான் எல்லையில் ஹெலிபேட் அமைக்கும் சீனா
இந்தியா, சீனா, பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லையும் சந்திக்கும் புள்ளியாக டோக்லாம் பீடபூமி உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த டோக்லாம் பீடபூமி அருகே சீனா ஹெலிபேட் அமைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இந்திய பகுதிகளை எளிதாக சீனாவால் கண்காணிக்க முடியும்; தேவைப்பட்டால் ராணுவத்தினரை விரைவாக இந்த பகுதிகளில் குவிக்க முடியும் என்றும் அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 55 ஆயிரம் கோடிக்கு 6 நீர்மூழ்கிக் கப்பல்கள்
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க ரூ. 55 ஆயிரம் கோடியில் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. ‘புராஜெக்ட் 75’ என பெயரிடப்பட்டுள்ள 6 நீர் மூழ்கிக் கப்பல்களின் கட்டுமானம், வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடன்- ஆனால், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே (மேக் இன் இந்தியா) கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.